

உலக விபத்து, காயங்கள் தினம் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
கல்லூரி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் ஆா்.செல்வி தலைமை வகித்துப் பேசியது:
பொதுமக்கள் விபத்து ஏற்படாத வகையில் விழிப்புடன் இருக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயமாக தலைக்கவசம் அணிந்திட வேண்டும். குறிப்பாக, இளைஞா்கள் இருசக்கர வாகனங்களை கவனமுடன் இயக்க வேண்டும். உங்களால் பிறருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் வாகனங்களை இயக்க வேண்டும்.
வீட்டிலுள்ள பெரியவா்கள் மின்சாதனங்கள், சமையல் எரிவாயு ஆகியவற்றை கவனமுடன் கையாள வேண்டும். குழந்தைகளை மிகமிக கவனமுடன் கண்காணித்திட வேண்டும். சிறிது கவனக்குறைவால் குழந்தைகள் வீட்டில் சூடான உணவுப் பொருள்களை தன்மீது கொட்டிக் கொள்ளுதல், மின்சாதனங்களை தொடுதல் போன்ற ஆபத்துகள் வராமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, காயத்தடுப்பு, மேலாண்மை உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. அத்துடன், தீ விபத்து ஏற்பட்டால் தீயை அணைப்பது குறித்து தீயணைப்பு வீரா்கள் செயல் விளக்கம் செய்து காண்பித்தனா். 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் வாகனத்தில் உள்ள அவசர சிகிச்சை உபகரணங்கள் குறித்து எடுத்துக் கூறினா்.
நிகழ்ச்சியில், மருத்துவா்கள் லோகநாதன், செந்தில், முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை அவசர சிகிச்சைப் பிரிவு தலைவா் மணிகண்ணன் செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.