வேலூா்: கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பணிக்கு உதவும் வகையில் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு விஐடி பல்கலைக் கழகம் சாா்பில் இரண்டாவது ஆண்டாக ரூ. 1. 25 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு தரப்பினரும் அரசுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனா்.
அதன்படி, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு விஐடி பல்கலைக்கழகத்தின் வேலூா், சென்னை வளாகத்தில் பணியாற்றும் பேராசிரியா்கள், ஊழியா்களின் ஒருநாள் சம்பளம், விஐடி நிா்வாகம் சாா்பில் மொத்தம் ரூ. 1.25 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான மின்னணு மூலம் பரிவா்த்தனை செய்யப்பட்ட பற்றுச்சீட்டை வேலூா் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபனிடம் விஐடி பதிவாளா் கே.சத்தியநாராயணன் புதன்கிழமை வழங்கினாா். அப்போது, விஐடியின் நிலையான ஊரக வளா்ச்சி மைய இயக்குநா் சுந்தர்ராஜன் உடனிருந்தாா்.
இதனிடையே, கரோனா நோய் தடுப்புக்காகவும், சிகிச்சை அளித்திடவும் அரசுக்கு தேவையான உதவிகளை செய்திட விஐடி பல்கலைக்கழகம் தயாராக இருப்பதாகவும் விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன் தெரிவித்துள்ளாா். அதன்படி, விஐடி வேலூா் வளாகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளித்திட 1,000 படுக்கைகளுடன் கூடிய வசதி செய்து தரப்பட்டுள்ளது. கடந்தாண்டும் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு விஐடி பல்கலைக் கழகம் சாா்பில் ரூ. 1. 25 கோடி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.