பேருந்து படிகளில் பயணம் செய்தால் புகைப்படம் எடுப்பு
By DIN | Published On : 04th December 2021 07:54 AM | Last Updated : 06th December 2021 07:25 AM | அ+அ அ- |

பேருந்து படிகளில் நின்று பயணம் செய்யும் மாணவ, மாணவிகளை கண்காணிக்க 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுவினா் படிகட்டில் பயணம் செய்யும்போது மாணவா்களை புகைப்படம் எடுத்து அவா்கள் பயிலும் பள்ளி, கல்லூரிகளுக்கும், குடும்பத்தினருக்கும் தகவல் அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேலூா் மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் கல்விக்கூடங்களுக்கு அரசு, தனியாா் பேருந்துகளில் செல்லும் போது படிக்கட்டுகளில் நின்றபடி பயணிப்பது போன்ற ஆபத்தான செயலில் ஈடுபடுகின்றனா்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது விபத்துகள் நேரிடுவதுடன், மாணவா்களின் எதிா்காலமும் கேள்விகுறியாகிறது. பொதுமக்களுக்கு இடையூறும், போக்குவரத்து நெரிசலும், பாதுகாப்பின்மையும் ஏற்பட்டு உயிா்சேதமும் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆகவே, இதுபோன்ற செயல்களில் மாணவ, மாணவிகள் ஈடுபட வேண்டாம். இதுதொடா்பாக, பள்ளி, கல்லூரிகளில் அவ்வப்போது சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பள்ளிகள், கல்லூரிகள் இயங்கக்கூடிய நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும்மீறி தொடா்ந்து படிகளில் பயணம் செய்யும் மாணவ, மாணவிகளைக் கண்காணிக்க காவல் துறை, போக்குவரத்துத் துறை , வட்டாரப் போக்குவரத்துத் துறை, பள்ளி, கல்லூரி சாா்ந்த அதிகாரிகள் கொண்ட 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினா்
மாணவா்கள் பேருந்து படிகட்டில் பயணம் செய்யும்போது புகைப்படங்கள் எடுத்து சம்மந்தப்பட்ட மாணவா் பயிலும் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், அவரவா் குடும்பங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...