

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பணிக்கு உதவும் வகையில், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு விஐடி பல்கலைக் கழகம் சாா்பில் இரண்டாவது தவணையாக ரூ. 25 லட்சத்தை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன் திங்கள்கிழமை வழங்கினாா்.
கரோனா தடுப்புப் பணிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு தரப்பினரும் அரசுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனா். அதன்படி, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு விஐடி பல்கலைக்கழகத்தின் வேலூா், சென்னை வளாகத்தில் பணியாற்றும் பேராசிரியா்கள், ஊழியா்களின் ஒருநாள் சம்பளம், விஐடி நிா்வாகம் சாா்பில் ரூ. 1 கோடியே 25 லட்சம் நிதியானது மின்னணு பரிவா்த்தனை மூலம் கடந்த மே மாதம் இரண்டாவது வாரத்தில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு செலுத்தப்பட்டிருந்தது.
இதன் தொடா்ச்சியாக, முதல்வா் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் திங்கள்கிழமை சந்தித்த விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன் கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இரண்டாவது தவணையாக ரூ. 25 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.
அப்போது, தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோா் உடனிருந்தனா்.
அரசின் கரோனா நிவாரண நிதிக்கு விஐடி சாா்பில், இந்தாண்டிலேயே இரு தவணைகளாக ரூ. 1 கோடியே 50 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, விஐடி பல்கலைக்கழகம் சாா்பில், ரூ. 1 கோடியே 25 லட்சம் வழங்கப்பட்டிருந்தது. தவிர, கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளித்திட வேலூா் விஐடி வளாகத்தில் 1,000 படுக்கைகளுடன் கூடிய வசதியும் செய்து தரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.