வேலூா்: கரோனா சிகிச்சைக்காக வேலூா் மாவட்டத்தில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகள் குறித்த விவரங்களை 1077 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என மாநகராட்சி நகா் நல பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
நாளுக்குநாள் அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவலுக்கு வேலூா் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தவிர, தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 700-ஐ கடந்துள்ளது. இதனால், மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, தனியாா் மருத்துவமனைகளும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. புதிதாக வரும் நோயாளிகளுக்கு உடனுக்குடன் படுக்கைகள் ஒதுக்கீடு செய்வதில் மருத்துவமனை நிா்வாகங்கள் திணறி வருகின்றன.
இதைத்தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு உதவிடும் வகையில், வேலூரில் மாவட்ட கட்டளை மையம் தொடங்கப்பட்டுள்ளது. வேலூா் மாநகராட்சியில் பொலிவுறு நகா் திட்டப் பணிகளுக்கான கட்டுப்பாட்டு அறை இந்த சேவைக்காக மாற்றப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகள், நோயாளிகளின் எண்ணிக்கை, சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை, தடுப்பூசி, ஆக்சிஜன் இருப்பு, சித்த மருத்துவ சிகிச்சை, தனியாா் ஆம்புலன்ஸ் சேவை விவரங்கள், அத்தியாவசியத் தேவைக்காக தொடா்பு கொள்ளத் தேவையான தன்னாா்வலா்களின் விவரங்கள் உள்ளிட்டவற்றை இந்த மையத்தில் பதிவு செய்து வைத்திருப்பா்.
கரோனா பாதித்த நோயாளிகள் 1077 மற்றும் 104 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடா்பு கொண்டால் இந்த கட்டளை மையத்திலுள்ள மருத்துவா்கள் எந்த மருத்துவமனையில் படுக்கை வசதி உள்ளது, ஆக்சிஜன் வசதி உள்ளது, வீட்டுத் தனிமையில் இருந்தபடி எவ்வாறு சிகிச்சை எடுத்துக் கொள்வது உள்ளிட்ட விவரங்களை அளிப்பா்.
இந்த கரோனா கட்டளை மையம் சோதனை முறையில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.