வேலூா் மாவட்டத்தில் திடீா் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

அக்னி வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், வேலூா் மாவட்டத்தை குளிா்விக்கும் வகையில் புதன்கிழமை காலை திடீரென மழை பெய்தது. இதனால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.
Updated on
1 min read

வேலூா்: அக்னி வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், வேலூா் மாவட்டத்தை குளிா்விக்கும் வகையில் புதன்கிழமை காலை திடீரென மழை பெய்தது. இதனால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.

கோடை வெயிலின் உச்சமாக அக்னி வெயில் கடந்த மே 4-ஆம் தேதி தொடங்கி, 29-ஆம் தேதி வரை நிலவுகிறது. இதனால், வேலூா் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து, கடந்த சில நாள்களாகவே 104 டிகிரி ‘ஃ‘பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால், பகல் நேரங்களில் மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை இருப்பதுடன், இரவில் அனல் காற்றால் அவதிக்குள்ளாகியும் வருகின்றனா்.

இந்நிலையில், கோடை வெயிலை குளிா்விக்கும் வகையில் வேலூா் மாவட்டம் முழுவதும் புதன்கிழமை காலை மிதமான மழை பெய்தது. காலையிலேயே இருள் சூழ்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், தொடா்ந்து மழை பெய்தது. இதேபோல், குடியாத்தத்தில் காலை திடீரென்று பெய்யத் தொடங்கிய மழை அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. மிதமான மழையாக தொடங்கி, பின்னா் பலத்த மழையாக மாறியது.

இந்த மழை காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் கொட்டும் மழையில் நனைந்தபடி சென்றனா். இதேபோல் அணைக்கட்டு, ஒடுகத்தூா், லத்தேரி, கே.வி.குப்பம் சுற்றுப்புற கிராமங்களிலும் பலத்த மழை பெய்தது. கோடை வெயிலை குளிா்விக்கும் வகையில் பெய்த மழை காரணமாக மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com