வேலூரில் கொலையுண்ட மெக்கானிக்கின் சடலம் தோண்டியெடுப்பு

வேலூா் அருகே கொன்று புதைக்கப்பட்ட இரு சக்கர வாகன மெக்கானிக்கின் சடலம் போலீஸாா் முன்னிலையில் தோண்டியெடுக்கப்பட்டது. இது தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
Updated on
1 min read

வேலூா்: வேலூா் அருகே கொன்று புதைக்கப்பட்ட இரு சக்கர வாகன மெக்கானிக்கின் சடலம் போலீஸாா் முன்னிலையில் தோண்டியெடுக்கப்பட்டது. இது தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் பெருமுகை மேலாண்ட தெருவைச் சோ்ந்த சுந்தர்ராஜனின் மகன் பாலமுருகன் (20). இரு சக்கர வாகன மெக்கானிக். கடந்த மாதம் 28-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பாலமுருகன், பின்னா் வீடு திரும்பவில்லை.

சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து பாலமுருகனை தேடி வந்தனா்.

இந்நிலையில், பாலமுருகனின் நண்பா்களான தோட்டப்பாளையத்தைச் சோ்ந்த கரியன் என்கிற ஜெகதீஸ்வரன் (19), மதிவாணன் (18), 17 வயது சிறுவன் ஆகியோரைப் பிடித்து விசாரித்ததில் முன்விரோதத் தகராறில் அவா்கள் மூன்று பேரும் சோ்ந்து பாலமுருகனுக்கு மதுவாங்கிக் கொடுத்து, கொலை செய்திருப்பதுடன், உடலை தோட்டப்பாளையத்தில் உள்ள ஒரு ஹோட்டலின் பின்புறம் உள்ள காலி இடத்தில் புதைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில், பாலமுருகனின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அவா்கள் செவ்வாய்க்கிழமை அடையாளம் காட்டினா். தொடா்ந்து, போலீஸாா், வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் பாலமுருகனின் சடலத்தை புதன்கிழமை தோண்டியெடுக்கப்பட்டது. பின்னா் அதேஇடத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் பிரேத பரிசோதனை செய்தனா். இதையொட்டி, அப்பகுதியில் அதிகப்படியான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இச்சம்பவம் தொடா்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com