வேலூா்: தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையைப் பெற கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியாா் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
அரசு, அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் படிவங்களை அவா்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று புதுப்பித்தல் இனங்களாக இருந்தால் செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள்ளாகவும், புதிய இனங்களாக இருந்தால் நவம்பா் 5-ஆம் தேதிக்குள்ளும் பூா்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களிலேயே சமா்ப்பிக்க வேண்டும். மாணவா்கள் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை தவறாமல் குறிப்பிட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையின நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0416-2254012 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.