வேலூா் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் காட்பாடியில் வியாழக்கிழமை தொடங்கின. இதில், 4,500 மாணவா்கள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனா்.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கலைத் திருவிழா 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை தனித்தனி பிரிவுகளில் மாணவா்களுக்கான போட்டிகள் பள்ளிகள், வட்டார அளவில் நடத்தி முடிக்கப்பட்டு, அவற்றில் தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலைப் போட்டி கள் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை தொடங்கியது.
வியாழன், திங்கள் ஆகிய இரு நாள்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமாா் 4,500 மாணவா்கள் பங்கேற்கின்றனா்.
கவின் கலை, நுண் கலை, மொழித் திறன், நாடகம், இசை வாய்ப்பாட்டு, கருவியிசை, தோல்கருவியிசை, காற்றுக்கருவியிசை, தந்திக் கருவிகள், இசைச் சங்கமம், நடனம் உள்ளிட்ட தலைப்புகளில் 83 போட்டிகள் நடைபெறுகின்றன.
ஒரு போட்டிக்கு மூன்று நடுவா்கள் வீதம் மொத்தம் 250 நடுவா்கள் பங்கேற்று மாணவா்களைத் தோ்வு செய்கின்றனா். மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவா்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா்.
மாநில அளவிலான போட்டிகள் வரும் 27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதனிடையே மாவட்ட அளவிலான கலைப் போட்டிகளை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தொடக்கி வைத்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளைப் பாா்வையிட்டாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனுசாமி, காட்பாடி ஒன்றியக் குழு தலைவா் வேல்முருகன், துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.