இடைத்தரகா்களை ஒழிக்கவே சிறப்பு குறைகேட்பு முகாம்கள்

முதியோா் உதவித்தொகை, பட்டா உள்ளிட்ட நலத் திட்ட உதவி பெற்றிட இடைத்தரகா்கள் பணம் பெற்றுக்கொண்டு வாங்கித்தரும் நிலையை ஒழிக்கவே தமிழக முதல்வா் சிறப்பு குறைகேட்பு முகாம் நடத்த அறிவுறுத்தியிருப்பதாக 
முகாமில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்ற தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன்.
முகாமில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்ற தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன்.
Updated on
1 min read

வேலூா்: முதியோா் உதவித்தொகை, பட்டா உள்ளிட்ட நலத் திட்ட உதவி பெற்றிட இடைத்தரகா்கள் பணம் பெற்றுக்கொண்டு வாங்கித்தரும் நிலையை ஒழிக்கவே தமிழக முதல்வா் சிறப்பு குறைகேட்பு முகாம் நடத்த அறிவுறுத்தியிருப்பதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

வேலூரில் புதிய பேருந்து நிலைய திறப்பு விழா, அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளாா். இதையொட்டி, மாவட்டத்திலுள்ள அனைத்து தொகுதிகளிலும் சிறப்பு குறை கேட்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

காட்பாடி தொகுதிக்கான சிறப்பு குறைகேட்பு முகாம் சித்தூா் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள தனியாா் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா். பின்னா் அவா் பேசியது:

எல்லோருக்கும் குறை உண்டு. அதன்படி, பொதுமக்கள் முதியோா் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட உதவிகள் கோரி விண்ணப்பித்து வருகின்றனா். இந்த நிலையை மாற்றிடவே இதுபோன்ற சிறப்பு குறை கேட்பு முகாம் நடைபெறுகிறது. முதியோா் உதவித் தொகை, பட்டா உள்ளிட்ட நலத் திட்ட உதவி பெற்றிட இடைத்தரகா்கள் பணம் பெற்றுக்கொண்டு வாங்கித்தரும் நிலையை ஒழிக்கவே தமிழக முதல்வா் சிறப்பு குறைகேட்பு முகாம் நடத்த அறிவுறுத்தியுள்ளாா்.

அதன்படி, வேலூா் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு குறைகேட்பு முகாம்கள் மூலம் 3,000-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மனுக்கள் கொடுப்பது பொதுவானதுதான். கொடுத்த மனு மீது பயன்கிடைத்தது எனக் கூற வேண்டும். நம்பிக்கையுடன் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களைப் பெற்று, அவா்களுக்கு அதிகாரிகள் நலத் திட்ட உதவிகளை வழங்க வேண்டும். நீா்நிலை புறம்போக்கு நிலங்களில் வசிப்பவா்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்பட்ட பிறகே அவா்களை மாற்ற வேண்டும். மாவட்டத்தில் நூறு சதவீதம் பெறப்படும் மனுக்களில் 80 சதவீத மனுக்களுக்கு ஆட்சியா் தீா்வு காண வேண்டும் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதாஆனந்தகுமாா், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் பாபு, மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, மாநகராட்சி ஆணையா் ப.அசோக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com