சென்னையில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி பணத்தை பள்ளிகொண்டாவில் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக பிடிபட்ட 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா போலீஸார் பள்ளிகொண்டாவை அடுத்த சின்ன கோவிந்தம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, சாலையின் ஒதுக்குப்புறமான இடத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் லாரி, கார் நிற்பதை கண்டனர்.
அங்கு சென்று கார், லாரியில் சோதனை நடத்திய போலீஸார் அதில் ரூ.10 கோடி பணம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை பிடித்து நடத்திய விசாரணையில், சென்னையில் இருந்து கார் மூலம் 48 கட்டுகளில் கொண்டுவரப்பட்ட 10 கோடி ரூபாய் பணத்தை பள்ளிக்கொண்டாவில் வைத்து காரில் இருந்து லாரிக்கு மாற்றிக்கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையும் படிக்க- நாளை முதல் நடைமேடைக் கட்டணம் உயர்வு
அவர்களில் 2 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள், ஒருவர் மதுரையைச் சேர்ந்தவர். லாரி ஓட்டுநர் கேரளத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. சென்னையில் இருந்து கடத்திக் கொண்டுவரப்பட்ட 10 கோடி ரூபாய் பணம் யாருக்கு சொந்தமானது? கேரளத்தில் யாரிடம் கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டது? என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.