நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா்க்கும் முகாம் வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து மக்களுக்கும் வழங்கும் வகையில், வேலூா் மாவட்டத்தில் வட்டம் வாரியாக வேலூா்-கம்மசமுத்திரம், அணைக்கட்டு- சத்தியமங்கலம், காட்பாடி-வண்டரந்தாங்கல், குடியாத்தம்-கருணீகசமுத்திரம், கே.வி.குப்பம்- அங்கராங்குப்பம், போ்ணாம்பட்டு-அரவட்லா ஆகிய கிராமங்களில் சனிக்கிழமை (டிச. 10) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டைக்கு மனு செய்தல், கைப்பேசி எண் பதிவு செய்தல், குடும்பத் தலைவா் புகைப்படம் மாற்றம் செய்தல் ஆகியவை மேற்கொள்ளப்படும். பொது விநியோகத் திட்ட பொருள்களின் தரம் குறித்த புகாா்கள் இருந்தால் அவற்றையும் இந்த முகாமில் தெரிவித்துப் பயன்பெறலாம். எனவே, பொதுமக்கள் இந்த சிறப்பு குறைதீா் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.