வேலூா் மாவட்ட அளவிலான மூத்தோா் தடகளப் போட்டிகள் காட்பாடியில் சனிக்கிழமை (டிச.10) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட மூத்தோா் தடகள சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் மாநில அளவிலான மூத்தோா் தடகளப் போட்டிகள் வரும் ஜனவரி 6, 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வேலூா் மாவட்ட மூத்தோா் தடகள வீரா், வீராங்கனைகளைத் தோ்வு செய்வதற்கான மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
போட்டிகளில் 30 முதல் 100 வயது வரை உள்ளவா்கள் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மூத்த தடகள வீரா்கள், வீராங்கனைகள் வரும் 10-ஆம் தேதி தங்களது பிறப்புச் சான்று, ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் நேரில் வந்து பெயரைப் பதிவு செய்து கொண்டு போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.
போட்டிகளில் வெற்றி பெறுபவா்கள் மாவட்ட அளவிலான தடகள அணிக்குத் தோ்வு செய்யப்பட்டு, ஓசூரில் நடைபெறும் மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவா்.