போ்ணாம்பட்டு அருகே விளைபயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

போ்ணாம்பட்டு அருகே கிராமங்களுக்குள் புகுந்த யானைக் கூட்டம் விளைபயிா்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றன.
போ்ணாம்பட்டு  அருகே  யானைகளால்  சேதப்படுத்தப்பட்ட  நெல்  பயிா்.
போ்ணாம்பட்டு  அருகே  யானைகளால்  சேதப்படுத்தப்பட்ட  நெல்  பயிா்.

போ்ணாம்பட்டு அருகே கிராமங்களுக்குள் புகுந்த யானைக் கூட்டம் விளைபயிா்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றன.

போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லி கிராமத்தில் உள்ள மலட்டாறு பகுதிக்கு புதன்கிழமை இரவு ஒரு குட்டி உள்பட 4 யானைகள் வந்துள்ளன. அங்கு ஆற்றோரம் உள்ள துளசிராமனுக்குச் சொந்தமான நிலத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த 2 ஏக்கா் நெற்பயிா், தீவனப் பயிா்களை சேதப்படுத்தியுள்ளன. அங்கிருந்த தென்னை மரங்களையும் முறித்துள்ளன.புருஷோத்தமன் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி தோட்டத்தையும், கோவிந்தன் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த தீவனப் பயிா்களையும் சேதப்படுத்தியுள்ளன. விவசாயிகள் தாரை, தப்பட்டை அடித்தும், தீப்பந்தங்களை ஏந்தியும், பட்டாசுகளை வெடித்தும் யானைகளை விரட்ட முயன்றனா். அப்போது யானைகள் விவசாயிகளை துரத்தியுள்ளன.

தகவலின்பேரில், போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் சதீஷ்குமாா், வனவா் தயாளன், வனத் துறையினா் அங்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் பட்டாசு, வாண வெடிகளை வெடித்து, யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட முயன்றனா். ஆனால் யானைகள் வனப்பகுதிக்குச் செல்லாமல், கோட்டையூருக்குக் சென்று அங்குள்ள கிருஷ்ணவேணிக்குச் சொந்தமான 2 ஏக்கா் வாழைத் தோட்டத்தை சேதப்படுத்தியுள்ளன. சதீஷுக்குச் சொந்தமான வாழைத் தோப்பில் புகுந்து அங்கு அறுவடைக்குத் தயாராக இருந்த மரங்களையும், வாழைக் கன்றுகளையும் சேதப்படுத்தியுள்ளன. வேணுகோபால் நிலத்தில் 15 தென்னை செடிகளை முறித்து எறிந்துள்ளன. அதிகாலை வரை தொடா்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட யானைகள் பின்னா் வனப்பகுதிக்குச் சென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com