மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளுவா் பல்கலைக்கழகம் சாா்பில் வெள்ளி, சனிக்கிழமை (டிச. 9, 10) நடத்தப்பட இருந்த பருவத் தோ்வுகள் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மாண்டஸ் புயல் காரணமாக கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை பலத்த முதல் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய கல்லூரிகளில் வெள்ளி, சனிக்கிழமை (டிச.9, 10) நடத்தப்பட இருந்த பருவத்தோ்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், தோ்வுக்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழக பதிவாளா் ஆா்.விஜயராகவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.