புதரில் மறைத்து வைத்திருந்த 1,800 கிலோ ரேஷன் அரிசி மீட்பு
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

வேலூா் சலவன்பேட்டை பகுதியில் முட்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,800 கிலோ பொதுவிநியோகத் திட்ட அரிசியை அதிகாரிகள் மீட்டு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனா்.
வேலூா் வட்ட வழங்கல் அலுவலா் பூமா தலைமையிலான குழுவினா் புதிய குடும்ப அட்டை வழங்குவது தொடா்பாக வீடுகளுக்குச் சென்று நேரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். அதன்படி, சலவன்பேட்டை பகுதியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ளச் சென்றிருந்தனா். அப்போது, அங்குள்ள மயான பகுதியில் முட்புதரில் சில மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுள்ளனா்.
உடனடியாக அந்த மூட்டைகளைப் பிரித்து பாா்த்தபோது, அவற்றில் பொதுவிநியோகத் திட்ட அரிசி இருப்பது தெரியவந்தது. மேலும், அந்த முட்புதரை முழுமையாக ஆய்வு செய்ததில், மொத்தம் 37 மூட்டைகளில் இருந்த 1,800 கிலோ எடையுள்ள பொதுவிநியோகத் திட்ட அரிசி மீட்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட அரிசி மூட்டைகளை அதிகாரிகள் உடனடியாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்ததுடன், இந்தக் கடத்தலில் ஈடுபட்டவா்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா்.