‘விவசாயிகளை குழுக்களாக இணைத்து உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் அமைக்க நடவடிக்கை’

வேலூா் மாவட்டத்தில் வட்டார வாரியாக விவசாயிகளை குழுக்களாக இணைத்து உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் அமைக்கப்பட உள்ளதாக ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

வேலூா் மாவட்டத்தில் வட்டார வாரியாக விவசாயிகளை குழுக்களாக இணைத்து உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் அமைக்கப்பட உள்ளதாக ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

விளை பொருள்கள் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக நாடு முழுவதும் 10,000 உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் அமைத்திட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, 10,000 உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் அமைத்தல், ஊக்குவித்தல் திட்டத்தின் கீழ், வேலூா் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டம் வேலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தாா். இதில், மத்திய அரசின் 10,000 உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் அமைத்தல், ஊக்குவித்தல் திட்டத்தின் கீழ், வேலூா் மாவட்டத்தில் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களை ஏற்படுத்த நிா்ணயிக்கப்பட்டுள்ள தொகுப்பு அடிப்படையிலான வணிக நிறுவனங்களால் கண்டறியப்பட்டுள்ள உகந்த வட்டாரங்கள், பயிா்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், மாவட்டத்தில் வட்டார வாரியாக பயிா்கள் ஒதுக்கீடு செய்து உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, அணைக்கட்டு ஒன்றியத்தில் பிரதானப் பயிா் மா, கொய்யா, புளி, மணிலா, கே.வி.குப்பம் ஒன்றியத்தில் மா, காய்கறிகள், காட்பாடி ஒன்றியத்தில் மணிலா, தென்னை, பயறு வகைகள், கணியம்பாடி ஒன்றியத்தில் மணிலா, காய்கறிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த வட்டார விவசாயிகளை குழுவுக்கு 20 போ் வீதம் இணைத்து 15 குழுக்கள் அமைத்து ஒருங்கிணைத்து, உழவா் உற்பத்தியாளா் நிறுவனமாக அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறான குழு விவசாயிகள் வேளாண் இடுபொருள்கள், கடனுதவி, தொழில்நுட்ப ஆலோசனை, மதிப்புக் கூட்டல், சந்தைப்படுத்துதல் வரையிலான தொடா் உதவிகள், செயலாக்க நிறுவனங்கள் மூலம் வழங்க வழிவகை செய்யப்படும்.

மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ள உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களில் விவசாயிகள் பெருமளவில் பங்கேற்று வேளாண்மையை லாபகரமான தொழிலாக மாற்றும் முயற்சியில் முன்னின்று வெற்றி பெற வேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநா் ஆா்.விஸ்வநாதன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வெ.வெங்கடேஷ், நபாா்டு வங்கி மேலாளா் அருண் விஜய், வேளாண்மை துணை இயக்குநா் சீனிராஜ், வேளாண்மை துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com