வேலூர்: வேலூர் பொலிவுறு நகரப் பணிகளில் குளறுபடி இருப்பது உண்மை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் புதிய பேருந்து நிலையம் ரூ.53 கோடியில் கட்டப்பட்டு தமிழக முதல்வரால் கடந்த மாதம் துவங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று சென்னைக்கு பேருந்து போக்குவரத்தை தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், கிருஷ்ணா நதி நீர் சென்னைக்கு கண்டலேறுவிலிருந்து கால்வாய் வழியாக தண்ணீர் செல்லும் போது தண்ணீரை அங்குள்ளவர்கள் எடுத்துகொள்கின்றனர் . இது அந்த காலத்தில் இருந்தே நடந்து வருகிறது. இதனால் தான் தண்ணீர் சென்னைக்கு குறைவாக வருகிறது.
அதிமுக அலுவலகம் சீல் வைப்பு திமுகவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது என செய்தியாளர்கள் கேட்டதற்கு, பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எங்களுக்கு ஒன்றுதான். அவர்களின் தனிப்பட்ட தயவு எங்களுக்கு தேவையில்லை. தேவைப்படுகின்ற அளவிற்கு தி.மு.க இல்லை.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக விவகாரத்தில் அரசின் விதிமுறைப்படி விழா அழைப்பிதழில் பெயரை போட்டிருக்க வேண்டும். ஆனால் அதனை பின்பற்றப்படவில்லை.
தமிழ்நாட்டில் கரோனா கட்டுபாட்டில் இருந்தது. ஆனால் இப்போது கட்டுபாட்டை மீறி வருகிறது. ஆனாலும் பழைய வேகமில்லை. கரோனா பாதிக்கபடுபவர்கள் இரண்டு நாள்களில் சரியாகி விடுகின்றனர். கரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தொடர்ந்து தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.
வேலூர் பொலிவுறு நகரம் பணிகள் சரியில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அந்த குற்றச்சாட்டை நானும் வைத்தேன். அதற்கு மாநகராட்சி ஆணையரும், மாவட்ட ஆட்சியரும் தான் பதில் சொல்ல வேண்டும்.
மேல் அரசம்பட்டு அணை விரைவில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பாலாறு தடுப்பணைகள், திருப்பாற்கடல், அரும்பருதி, சேண்பாக்கம், பொய்கை மற்றும் அகரம், கவசம்பட்டு ஆகிய இடங்களில் அணைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது அதற்கு பிறகு பணிகள் துவங்கும்.
அரசு மணல் குவாரி துவங்க அனுமதி கேட்டுள்ளோம். எல்லா ஆறுகளிலும் தண்ணீர் இருக்கிறது என்று கூறினார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், ஆணையர் அசோக்குமார், மேயர் சுஜாதா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.