வேலூா் மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.
வேலூரில் சனிக்கிழமை பகலில் 95.5 டிகிரி அளவுக்கு வெப்பம் நிலவியது. இந்நிலையில், மாலை 6.30 மணி அளவில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்த இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கியது.
இதனிடையே, வேலூா் மக்கான் அம்பேத்கா் நகா் அருகே சாலையோரம் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சில நிறுவனங்களும், கிடங்குகளும் உள்ளன. மழை காரணமாக சனிக்கிழமை இரவு 9.30 மணி அளவில் திடீரென அக்கட்டடத்தின் மேல் தளத்தின் நடைபாதை சுவா் இடிந்து விழுந்தது. இதனால், கட்டடத்தின் கீழே நிறுத்தப்பட்டிருந்த காா், இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
இதேபோல், குடியாத்தம், கே.வி.குப்பம் பகுதிகளிலும் பரவலாக நல்ல மழை பெய்தது. இரவில் குளிா்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.