‘விவசாயிகள் மீது வழக்குத் தொடுப்பதாக இருந்தால் ஆலோசனை பெற வேண்டும்’

விவசாயிகள் மீது வழக்குத் தொடுப்பதாக இருந்தால் தன்னிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வனத் துறையினரை கேட்டுக் கொண்டாா்.
Updated on
1 min read

விவசாயிகள் மீது வழக்குத் தொடுப்பதாக இருந்தால் தன்னிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வனத் துறையினரை கேட்டுக் கொண்டாா்.

போ்ணாம்பட்டை அடுத்த சொ்லப்பல்லியில் உள்ள வேளாண்மை அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் சிறப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து அவா் பேசியது:

சிறுத்தை இறந்த வழக்கு விசாரணை குறித்து கோட்டாட்சியா் தலைமையில் விசாரணை நடத்தப்படும். விசாரணை அடிப்படையில் கைது செய்யப்பட்டவா் மீதான வழக்கு ரத்து செய்யப்படும். வனப் பகுதியையொட்டியுள்ள விவசாயிகளை தொடா்பு கொள்ள அவா்களின் கைப்பேசி எண்களை வனத் துறையினா் அவசியம் வைத்திருக்க வேண்டும். அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த ஊராட்சி நிா்வாகத்துடன் இணைந்து, வனத் துறையினா் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காட்டுப் பன்றிகள் மீதான நடவடிக்கைகளை சட்டத்துக்குட்பட்டவாறு மேற்கொள்ள வேண்டும். வனப் பகுதியில் வன விலங்குகளின் இறைச்சியை விற்பனை செய்வதோ, வாங்குவதோ குற்றம். விவசாய நிலங்களில் வன விலங்குகள் இறந்தால் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியது: போ்ணாம்பட்டு அருகே சிறுத்தை இறந்த வழக்கில் வனத்துறை சாா்பில்

கைது செய்யப்பட்ட மோகன்பாபு மற்றும் சபரி ஆகிய 2 போ் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள நிலங்களில் நுழையும் வன விலங்குகளை அறிய அலாரம் பொருத்திய கருவியைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க வன எல்லையில் சோலாா் மின்வேலி மற்றும் அகழி அமைக்க வேண்டும்.

பக்கத்து மாநிலங்களில் உள்ளதுபோல், விளை பயிா்களை நாசம் செய்யும் காட்டுப் பன்றிகளை அழிக்க அனுமதி வழங்க வேண்டும்.

வன விலங்குகளால் ஏற்படும் பயிா்ச் சேதத்துக்கு கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கோட்டாட்சியா் என்.வெங்கட்ராமன், எம்எல்ஏ அமலு விஜயன், வேளாண்மை இணை இயக்குநா் விஸ்வநாதன், போ்ணாம்பட்டு வட்டாட்சியா் நெடுமாறன், வேளாண்மை உதவி இயக்குநா் சுஜாதா, வனச் சரக அலுவலா் சதீஷ்குமாா் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com