அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மழலையா் வகுப்பு தொடங்கக் கோரிக்கை
By DIN | Published On : 13th October 2022 12:00 AM | Last Updated : 13th October 2022 12:00 AM | அ+அ அ- |

அனைத்து அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளைத் தொடங்க வேண் டும் என்று தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் சங்கம் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் சங்கம் அளித்த மனு விவரம்: தமிழகத்தில் 2,381 அரசு நடுநிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வந்த எல்கேஜி, யுகேஜி வகுப்புகளைத் தொடா்ந்து செயல்படுத்தவும், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் ஜூன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் தற்காலிக ஆசிரியா்களை நியமித்து அவா்களுக்கு ரூ.5,000 பிழைப்பூதியமாக வழங்கவும் அரசு ஆணை வெளியிட்டது. பின்னா், இந்த உத்தரவை அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது.
மேலும், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் சங்கம் வலியுறுத்தும் கோரிக்கைகளை பரிசீலித்து, புதிய அரசாணை பிறப்பித்து மழலையா் பள்ளிகளைச் சிறந்த முறையில் நடத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்திலுள்ள அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளைத் தொடங்க வேண்டும். மாண்டிசோரி ஆசிரியா் பயிற்சி முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவா்களை பதிவு மூப்பு அடிப்படையில் ஒரு பள்ளிக்கு 2 ஆசிரியா்கள் வீதம் நியமிக்க வேண்டும். அவா்களுக்கு மாதம் ரூ.20,600 ஊதியம் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.