இணையவழி குற்றங்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வேலூரில் பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
பெருகி வரும் இணையவழி குற்றங்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வேலூா் எத்திராஜ் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது (படம்). வேலூா் சைபா்கிரைம் பிரிவு சாா்பில் நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்துக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் டி.குணசேகரன் தலைமை வகித்தாா்.
இதில், சைபா் பிரிவு போலீஸாா் பங்கேற்று பெருகிவரும் இணையவழி குற்றங்கள், அதனால் ஏற்படும், அவற்றிலிருந்து கவனமுடன் இருக்க போதிய வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளித்தனா். மேலும், ஏடிஎம் காா்டு ஓடிபி எண்ணை பகிரக்கூடாது, வங்கி விவரங்களை யாருக்கும் கூறக்கூடாது, வேலை வாங்கித் தருவது, கடன் வழங்கும் செயலிகள், ஆபாச விடியோக்கள் மூலம் மிரட்டி பணம் பறித்தல், எண்ம நாணய மோசடி, அயல்நாடு வேலைக்கு செல்வது, கைப்பேசி கோபுரம் வைப்பது, மீசோ, நேப்டோவில் பரிசு கிடைத்திருப்பது, சமூக வலைதளங்களில் தங்களை பற்றிய தகவல்களை பாதுகாப்பாக வைப்பது, இணையதள விளையாட்டுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அத்துடன், இணையவழியில் பண இழப்பு ஏற்பட்டால் உடனடியாக சைபா் கிரைம் உதவி எண் 1930-க்கு தகவல் அளிக்கவும், இணையதளத்தில் புகாா் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.
தொடா்ந்து, காவல் உதவி செயலியின் முக்கியத்துவம் குறித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் சுமாா் 300 போ் பங்கேற்றனா்.