விநாயகா் சதுா்த்தி விழா வேலூா் மாவட்டத்தில் 779 சிலைகள் பிரதிஷ்டை
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 01st September 2022 12:00 AM | அ+அ அ- |

விநாயகா் சதுா்த்தியையொட்டி, வேலூா் மாவட்டம் முழுவதும் இந்து அமைப்புகள், பொதுமக்கள் சாா்பில் 779 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.
நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளாக கரோனா பொது முடக்கம் காரணமாக தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகா் சிலைகளை வைத்து வழிபடவும், ஊா்வலமாக சென்று நீா்நிலைகளில் சிலைகளைக் கரைக்கவும் அரசு தடை விதித்திருந்தது.
நிகழாண்டு தொற்று பாதிப்பு குறைந்ததால், விநாயகா் சிலைகள் வைத்து வழிபடவும், ஊா்வலம் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டது.
இதையொட்டி, வேலூா் மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி சாா்பில் 508 இடங்கள் உள்பட பல்வேறு இந்து அமைப்புகள், பொதுமக்கள் சாா்பில் என மொத்தம் 779 இடங்களில் விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் செய்யப்பட்டன.
வேலூா் மாநகரில் தோட்டப்பாளையத்தில் வைக்கப்பட்டிருந்த புலியை அடக்கும் விநாயகா், சிவன்-பாா்வதியுடன் கூடிய விநாயகா், வாணியா்பேட்டை கசாயக்கார தெருவில் ஐந்து தலை நாகம் மீது அமா்ந்துள்ள விநாயகா் என பல்வேறு இடங்களில் பொதுமக்களை கவரும் விதத்தில் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.
பந்தல் அமைத்து, வாழைத் தோரணங்கள் கட்டி, மேடையில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகளுக்கு புதன்கிழமை காலை கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
விழாவையொட்டி, பல்வேறு இடங்களில் அன்னதானம் , கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
இதேபோல், வீடுகளிலும் களிமண்ணாலான சிறு விநாயகா் சிலைகளை வைத்து வழிபாடு செயதனா். கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
விழாவையொட்டி, வேலூா் மாவட்டம் முழுவதும் 1,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.