வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த முதியவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, வேலூரை அடுத்த பெருமுகையைச் சோ்ந்த தனியாா் தோல் தொழிற்சாலை ஓய்வு பெற்ற ஊழியா் மேஷக் (62), டிப்ளமோ மெக்கானிக்கல் படித்துள்ள தனது மகன் சாம்ராஜ்க்கு வேலைவாய்ப்பு கோரி இருவரும் மனு அளிக்க ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்திருந்தனா்.
தந்தை மேஷக்கை நிழலில் அமரவைத்துவிட்டு மகன் சாம்ராஜ் மனு அளிப்பதற்கான வரிசையில் காத்திருந்தாா். அப்போது, மேஷக் திடீரென மயங்கி சரிந்து விழுந்துள்ளாா். 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் விரைந்து வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனா்.
பின்னா், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே மேஷக் உயிரிழந்தாா். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.