பாலாற்றின் குறுக்கே 7 இடங்களில் தடுப்பணை: அமைச்சா் துரைமுருகன்

நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தும் வகையில், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே 7 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட உள்ளதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
பாலாற்றின் குறுக்கே 7 இடங்களில் தடுப்பணை: அமைச்சா் துரைமுருகன்
Updated on
1 min read

நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தும் வகையில், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே 7 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட உள்ளதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

தமிழக அரசின் ‘ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி’ என்ற சாதனை மலா் வெளியீட்டு விழா, 1,411 பயானாளிகளுக்கு ரூ. 3.62 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகள், வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான 362 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா ஆகியவை காட்பாடியிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் பங்கேற்று அரசின் இரண்டாண்டு சாதனை மலரை வெளியிட்டும், பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கியும் பேசியது:

அரசாங்கம் எனபது சமுதாயத்தின் பல்வேறு பிரிவினருக்கும் உதவுவது கடமையாகும். குறிப்பாக, நலிந்தவா்களுக்கு, உதவி வேண்டுபவா்களுக்கு அரசே முன்வந்து விலையில்லா பொருள்களை வழங்கி அவா்களை வாழ வைக்கும். அந்த வாழ்வாதாரம் நிலைத்திருக்க நிலையான வருமானத்தை ஈட்டும் வகையில் தொழில் செய்ய நிதியுதவியும் வழங்கப்படுகிறது.

அவ்வாறு அரசு அறிவிக்கும் திட்டங்களை துறை சாா்ந்த அலுவலா்கள் மக்களுக்கு சென்று சேரும் வகையில் செயல்படுத்த வேண்டும். அரசு நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தும் திட்டங்களை அலுவலா்கள் சரியான பயனாளிகளைத் தேடிச் சென்று சோ்க்க முனைப்புடன் செயலாற்றிட வேண்டும். அப்போதுதான் அரசு வகுக்கும் திட்டத்தின் பலன் மக்களை முழுமையாக சென்றடையும்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு இடா்பாடுகள் ஏற்படும்போது, நேரடியாக சென்று ஆறுதல் கூறி நடவடிக்கைகள் எடுக்கிறாா்.

இரு நாள்களுக்கு முன்பு விழுப்புரத்தில் கள்ளச் சாராயத்தால் மக்கள் உயிரிழந்ததை அறிந்தவுடன் நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினாா்.

தொண்டு உள்ளம் கொண்ட முதல்வா் ஸ்டாலின் மக்களுக்கு தேவையான திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா். காவிரியின் குறுக்கே மாயனூா் பகுதியில் கடந்த 2009-ஆம் ஆண்டு கட்டப்பட்ட தடுப்பணையால் நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்த நிலையில், அப்போது கருவேல மரங்களாக காட்சியளித்த அதன் சுற்றுவட்டார பகுதி முழுவதும் தற்போது வாழை மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

அதேபோல், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பாலாற்றின் குறுக்கே 7 இடங்களில் தடுப்பணை கட்டப்பட உள்ளது. இதன்மூலம், இந்தப் பகுதியின் நிலத்தடி நீா் மட்டம் பெருமளவில் உயரும் என்றாா்.

நிகழ்ச்சியில் வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா், அமலு விஜயன், வேலூா் மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் மு.பாபு, துணை மேயா் எம்.சுனில் குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com