குடியாத்தம் வட்டாரப் போக்குவரத்து பகுதிக்கு உள்பட்ட தனியாா் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வுக்குள்படுத்தியதில் 25 வாகனங்களுக்கு அனுமதிச் சான்றிதழ் நிறுத்தி வைக்கப்பட்டது.
குடியாத்தம், போ்ணாம்பட்டு, பரதராமி, கே.வி.குப்பம், மேல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 30 கல்வி நிறுவனங்களின் வாகனங்கள், குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டரங்கில் ஆய்வு செய்யப்பட்டன.
குடியாத்தம் கோட்டாட்சியா் எம்.வெங்கட்ராமன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் வெங்கடேசன், போக்குவரத்து ஆய்வாளா் எஸ்.பி.ராஜேஸ்கண்ணா, டிஎஸ்பி கே.ராமமூா்த்தி, தீயணைப்பு நிலைய அலுவலா்கள் ஜி.அரசு, சி.சரவணன் உள்ளிட்டோா் வந்திருந்த 191 வாகனங்களை ஆய்வு செய்தனா்.
வாகனங்களில் பள்ளி குறித்த விவரம், முதலுதவிப் பெட்டி, அவசர கால வழி, தீயணைப்புக் கருவி, வேகக் கட்டுப்பாட்டு கருவி, படிக்கட்டுகள், ஜன்னல்கள், இருக்கைகள் நல்ல நிலையில் உள்ளதா, தகுதிச் சான்றிதழ், காப்பீடு முறையாக செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஒரு சில குறைபாடுகள் உள்ள 25 வாகனங்கள் கண்டறியப்பட்டு, தகுதிச் சான்றிதழ் வழங்காமல் திருப்பி அனுப்பப்பட்டன. ஓட்டுநா்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாமும் நடைபெற்றது.