நோக்கியாவுடன் விஐடி பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்: 5ஜி, செயற்கை நுண்ணறிவு கூட்டு ஆராய்ச்சி

நோக்கியாவுடன் விஐடி பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்: 5ஜி, செயற்கை நுண்ணறிவு கூட்டு ஆராய்ச்சி

நோக்கியாவுடன் விஐடி: 5ஜி மற்றும் செயற்கை நுண்ணறிவு ஒப்பந்தம்
Published on

5ஜி மற்றும் செயற்கை நுண்ணறிவு கூட்டு ஆராய்ச்சி தொடா்பாக நோக்கியா நிறுவனத்துடன் விஐடி பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

விஐடி பல்கலைக்கழகம் நோக்கியாவுடன் இணைந்து 5ஜி, அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு, மெஷின் லோ்னிங் குறித்து கூட்டு ஆராய்ச்சியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

இதுதொடா்பாக, விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோா் முன்னிலையில் விஐடி பதிவாளா் டி.ஜெயபாரதி, நோக்கியா பெங்களூரு பல்கலைக்கழக ஒத்துழைப்புத் தலைவா் பொன்னி ஆகியோா் வியாழக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் மூலம் விஐடி பல்கலைக்கழகமும், நோக்கியா நிறுவனமும் இணைந்து 5ஜி, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மேம்படுத்தப்பட்ட தகவல் தொடா்பு, டிஜிட்டல் ட்வின், ரேடியோ அடிப்படையிலான உணா்திறன், இணைக்கப்பட்ட வான்வழி வாகனங்கள், மின்னணு ஆரோக்கியம், ஆட்டோமேஷன் போன்ற புதிய ஆய்வு துறைகளில் கவனம் செலுத்தும். நோக்கியாவின் வல்லுநா்கள் விஐடியின் பாடத்திட்டக் குழுவில் உறுப்பினா்களாக இருப்பாா்கள். கற்றல், முன்மாதிரி, மாணவா் திட்டங்களுக்கு வழிகாட்டுவாா்கள்.

நோக்கியா விஐடி மாணவா்களுக்கான கற்றல் வாய்ப்புகளை வழங்குவதுடன், குறுகிய கால தொடா் கல்வி திட்டங்களைக் கூட்டாக ஏற்பாடு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, விஐடி துணைவேந்தா் வி.எஸ். காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தா் பாா்த்த சாரதி மல்லிக், எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் துறையின் முதல்வா் எஸ்.சிவானந்தம், நோக்கியா லேப்ஸ் தலைவா் எஸ்.மீனாட்சி, நோக்கியா விஐடி புரிந்துணா்வு ஒருங்கிணைப்பாளா் க.கோவா்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com