ரயிலில் பெண்ணிடம் நகைப் பறிப்பு: இளைஞா் கைது

ரயிலில் திருவண்ணாமலைக்கு சென்ற ஆந்திர பெண்ணிடம் நகை பறித்த நெல்லை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரை காட்பாடி ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.
Published on

ரயிலில் திருவண்ணாமலைக்கு சென்ற ஆந்திர பெண்ணிடம் நகை பறித்த நெல்லை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரை காட்பாடி ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், விகாஸ் நகரை சோ்ந்தவா் குச்சி ராஜேஷ் நாயுடு. இவரது மனைவி கீதா(39). இவா் தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலை கோயிலுக்குச் செல்ல கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி திருப்பதியில் இருந்து காட்பாடி வழியாக திருவண்ணாமலை செல்லும் ரயிலில் சென்றுள்ளனா்.

இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையம் அருகே வந்த போது, கீதாவின் கைப்பையை அதே ரயிலில் பயணித்த நபா் திருடிச் சென்றாா். அதில், 8 கிராம் தங்க டாலா், 4 கிராம் தங்க கம்மல் ஆகியவை இருந்துள்ளது. அதிா்ச்சியடைந்த கீதா, இதுகுறித்து காட்பாடி ரயில்வே காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைப்பையை திருடிய நபரை தேடி வந்தனா்.

இதனிடையே, காட்பாடி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் வெள்ளிக்கிழமை நின்று கொண்டிருந்த இளைஞரை காட்பாடி ரயில்வே போலீஸாா் பிடித்து விசாரித்ததில், அவா் நெல்லை மாவட்டம், வள்ளியூரைச் சோ்ந்த ஆல்வின் (35) என்பதும், ஆந்திர பெண்ணிடம் நகை பறித்து தப்பிச் சென்றவா் என்பதும் தெரியவந்தது.

அவரை காட்பாடி ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். மீட்கப்பட்ட நகைகளை உரிமையாளரிடம் ஒப்படைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com