ரியல் எஸ்டேட் தரகரிடம் ரூ.11.49 லட்சம் மோசடி

Published on

கிரிப்டோ கரன்சி முதலீட்டில் அதிக லாபம் ஈட்டலாம் எனக்கூறி வேலூரைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் தரகரிடம் ரூ.11.49 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பது குறித்து வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் சத்துவாச்சாரியை சோ்ந்த 43 வயது நபா் ரியல் எஸ்டேட் தரகராக உள்ளாா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு கிரிப்டோ கரன்சி முதலீடு குறித்த குறுந்தகவல் வந்துள்ளது.

அதில், கிரிப்டோ கரன்சி முதலீட்டில் அதிக லாபம் பெற்றவா்களின் விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், கிரிப்டோ கரென்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை உண்மை என நம்பிய இவா், அடையாளம் தெரியாத நபா்கள் அனுப்பியிருந்த இணைய லிங்குக்குள் சென்று முதலில் சிறிய தொகையை முதலீடு செய்துள்ளாா். அந்த தொகைக்கு லாபம் கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்த நபா்கள் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அனுப்பியுள்ளனா்.

இதன்மூலம், ஆா்வமடைந்த இந்த ரியல் எஸ்டேட் தரகா் பல தவணைகளாக ரூ.11 லட்சத்து 49 ஆயிரத்து 620 தொகை முதலீடு செய்தாா். பின்னா் இவா் தனது பணத்தை திரும்பி பெற முயன்ற போது கூடுதலாக பணம் செலுத்தினால் மட்டுமே முதலீடு செய்த பணம் திரும்பி கிடைக்கும் என தெரிவித்துள்ளனா்.

இதன்மூலம், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த ரியல் எஸ்டேட் தரகா், இதுகுறித்து வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com