ரயிலிலிருந்து இளம்பெண்ணை கீழே தள்ளியவருக்கு 10 ஆண்டுகள் சிறை
வேலூா் அருகே ஓடும் ரயிலில் இளம் பெண்ணிடம் கைப்பேசியை பறித்துக் கொண்டு அவரை கீழே தள்ளிவிட்டுச் சென்ற இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வேலூா் மகிளா விரைவு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
சென்னையைச் சோ்ந்த 24 வயது இளம்பெண் ஒருவா் கடந்த 2022- ஆம் ஆண்டு திருமண அழைப்பிதழை உறவினா்களுக்கு கொடுக்க சென்னையிலிருந்து வேலூா் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்துக்கு ரயிலில் வந்துள்ளாா்.
ஜாப்ராபேட்டை அருகே ரயில் வந்தபோது ரயிலில் ஏறிய இளைஞா் ஒருவா் அந்த பெண்ணிடமிருந்து கைப்பேசியை பறித்துக்கொண்டு ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண்ணை தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டாா். இது குறித்து காட்பாடி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து கே.வி.குப்பத்தை அடுத்த பூஞ்சோலை கிராமத்தைச் சோ்ந்த ஹேம்ராஜ் (31) என்பவரை கைது செய்தனா்.
இது குறித்த வழக்கு வேலூா் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட ஹேம்ராஜுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1.10 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஹேம்ராஜ் கடந்த பிப்ரவரி மாதம் ஓடும் ரயிலில் கா்ப்பிணி பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்து தள்ளிவிட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.

