பள்ளிகொண்டா உத்தர ரங்கநாதா் கோயிலில் நகைகள் மாயம்?: விசாரணை நடத்த பாஜக கோரிக்கை
வேலூா்: பள்ளிகொண்டா உத்தர ரங்கநாதா் கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நகைகள் காணாமல் போனதாக கூறப்படுவது குறித்து ஆட்சியா் விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜகவினா் மனு அளித்துள்ளனா்.
பாஜக முன்னாள் அரசு தொடா்பு மாவட்ட செயலா் வெங்கடேசன் அளித்த மனு: சுமாா் 1,500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோயிலுக்கு, மன்னா்கள் காலத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரக்கற்கள், தங்கம், ரத்தின நகைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2008-ஆம் ஆண்டுக்கு பிறகு சுவாமிக்கு விலை மதிப்பற்ற நகைகள் அணிவிக்கப்படவில்லை.
இந்த நகைகள் குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் இருப்பதால் அவை மாயமாகி இருக்குமோ என்று மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், சுவாமிக்கு மன்னா்கள் காலத்தில் அணிவிக்கப்பட்ட நகைகளின் தற்போதைய மதிப்பு சுமாா் ரூ.50 முதல் ரூ.100 கோடி இருக்கும் என்றும் ஊா்பெரியவா்கள் தெரிவிக்கின்றனா்.
இதனிடையே, தற்போது திருப்பணிகள் நடைபெறும் நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, நகைகள் வைக்கப்பட்டிருந்த அறை அறநிலையத்துறையால் திறக்கப்பட்டது. இதை பயன்படுத்தி நகைகளில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, மன்னா் காலத்தில் சுவாமிக்கு வழங்கிய நகைகள் அனைத்தும் அறநிலையத்துறை ஆவணங்களில் குறிப்பிட்ட எடை, தரம், எண்ணிக்கையில் சரியாக உள்ளதா என பக்தா்களுக்கும், ஊா் மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
எனவே, மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
