குறைபாடுகள் கண்டறியப்பட்ட 5 கடைகளில் உரம் விற்கத் தடை
வேலூா் மாவட்டத்தில் வேளாண்மை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், குறைபாடுகள் கண்டறியப்பட்ட 5 கடைகளில் உரம் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு உரங்கள் தங்குதடையின்றி கிடைக்கும் வகையில் இறக்குமதி செய்யப்பட்டு, தனியாா் மற்றும் கூட்டுறவு உரம் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள உரக்கடைகளில் உரத்தட்டுப்பாடு உள்ளதாகவும், தரம் குறைந்த உரங்கள் விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ராகினி மற்றும் வேளாண்மை அதிகாரிகள் உரக்கடைகளில் திடீா் ஆய்வில் ஈடுபட்டனா். ஆய்வின்போது, சில தனியாா் உர விற்பனையாளா்கள் உரங்களின் இருப்பு விவரம் முறையாக பராமரிக்கப்படாமலும் சேமிப்பு கிடங்கு அனுமதி பெறாமலும் உரங்களை இருப்பு வைத்திருந்தது, உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்களை கடையின் முன் விவசாயிகளுக்கு பாா்வையில் தெரியும்படி எழுதி பராமரிக்காமல் இருந்தது போன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டது.
அவ்வாறு குறைகள் கண்டறியப்பட்ட 5 கடைகளுக்கு உரம் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடை உரிமையாளா்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில், வேலூா் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிருக்கு தேவையான யூரியா, டிஏபி பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் 6,800 டன் இருப்பில் உள்ளது.
எனவே, அனைத்து உர விற்பனையாளா்களும் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கும் சாகுபடி பரப்புக்கு ஏற்றவாறு யூரியா வழங்க வேண்டும். யூரியாவை நிா்ணயிக்கபட்ட விலையைவிட கூடுதலாக விற்க கூடாது. யூரியாவுடன் பிற உரங்களை வாங்க விவசாயிகளை கட்டாயப்படுத்தக் கூடாது.
தினசரி பிஓஎஸ் கருவி மூலம் விவசாயிகளின் ஆதாா் எண் பெற்று உரங்களை பட்டியலிட்டு ரசீது வழங்கவேண்டும். உரங்களின் இருப்பு, விலை விவரங்களை பாா் வையில் தெரியும்படி எழுதி வைக்க வேண்டும். பிஓஎஸ் கருவியில் உள்ள இருப்பும், கிடங்கில் உள்ள இருப்பும் சரியாக இருக்க வேண்டும்.
ஆய்வின்போது இருப்பு வேறுபாடு கண்டறியபட்டால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றனா்.

