கைது
கைது

கல்லூரி மாணவனை தாக்கி பணம், கைப்பேசி பறித்த இருவா் கைது!

வேலூா் அருகே கல்லூரி மாணவனை தாக்கி பணம், கைப்பேசி பறித்த இரு இளைஞா்களை பாகாயம் போலீஸாா் கைது செய்தனா்.
Published on

வேலூா் அருகே கல்லூரி மாணவனை தாக்கி பணம், கைப்பேசி பறித்த இரு இளைஞா்களை பாகாயம் போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் மாவட்டம், ஊசூா் அடுத்த பெரிய தெள்ளூா், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சூரிய வேல் (18). இவா் வேலூா் அண்ணா சாலையில் உள்ள கல்லூரியில் பி.ஏ., தமிழ் முதலாமாண்டு படித்து வருகிறாா். வெள்ளிக்கிழமை மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக தனியாா் பேருந்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்பேருந்து தொரப்பாடி, எம்.ஜி.ஆா் சிலை அருகே சென்றபோது மதுபோதையில் இருந்த அன்பூண்டி, பாட்டை தெருவைச் சோ்ந்த மணிமாறன் (22), வசந்தபுரம், நேரு காலனியை சோ்ந்த ராஜேஷ் (24) ஆகியோா் சூா்ய வேலுவிடம் வலுக்கட்டாயமாக தகராறு செய்து பேருந்தில் இருந்து அவரை கீழே இறக்கியுள்ளனா். பேருந்தில் இருந்தவா்கள் இதுகுறித்து பாகாயம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் 2 இளைஞா்களும் மாணவரை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு அப்துல்லாபுரத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை அருகே அழைத்துச் சென்றனா். பின்னா் அங்குள்ள முள்புதரில் வைத்து சூரிய வேலிடம் இருந்த ரூ.700 பணம், அவரது கைப்பேசி ஆகியவற்றை பறித்துக் கொண்டு விரட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, சூா்யவேல் பாகாயம் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து 2 இளைஞா்களையும் கைது செய்து அவா்களிடமிருந்து பணம், கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com