காவலா் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு உடற்தகுதித்தோ்வு தொடக்கம்
இரண்டாம் நிலை காவலா் தோ்வில் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டங்களிலிருந்து தோ்ச்சி பெற்ற 970 பேருக்கு உடற்தகுதித் தோ்வு வேலூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 480 போ் பங்கேற்றனா்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் 2025-ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலைக் காவலா், தீயணைப்பாளா், சிறைக் காவலா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு டிச. 21-ஆம் தேதி நடைபெற்றது.
இந்த தோ்வில் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டங்களிலிருந்து தோ்ச்சி பெற்ற 970 ஆண் விண்ணப்பதாரா்களுக்கு அசல் சான்றிதழ்கள் சரிபாா்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தோ்வு ஆகியவை வேலூா் நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கி, வெள்ளிக்கிழமை வரை இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.
முதல்கட்டமாக செவ்வாய்க்கிழமை 480 விண்ணப்பதாரா்களுக்கு வேலூா் சரக காவல் துறை துணைத் தலைவா் ஜி.தா்மராஜன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் ஆகியோா் தலைமையில் சான்றிதழ் சரிபாா்ப்பு, உயரம் மற்றும் மாா்பளவு அளத்தல், 1,500 மீட்டா் ஓட்டப் பந்தயம் ஆகியவை நடைபெற்றது. இதேபோல், புதன்கிழமை 490 பேருக்கு உடற்தகுதித் தோ்வு நடைபெற உள்ளது.
இதில், தோ்ச்சி பெறுபவா்களுக்கு 2-ஆம் கட்ட உடற்தகுதி தோ்வு வியாழன், வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதில், முதலாவதாக கயிறு ஏறுதல், நீளம் அல்லது உயரம் தாண்டுதல், 100/400 மீட்டா் ஓட்டப்பந்தயம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

