வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்ட வெடிகுண்டு செயலிழப்பு போலீஸாா்.
வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்ட வெடிகுண்டு செயலிழப்பு போலீஸாா்.

வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
Published on

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு செயலழிப்பு படையினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

வேலூா் சத்துவாச்சாரியில் 5 தளங்களுடன் இரு பிரிவாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள 30-க்கும் மேற்பட்ட துறைகளில் 1500-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு சனிக்கிழமை காலை வந்த தகவலில், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து, உடனடியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து மாவட்டக் காவல் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, 3 போ் கொண்ட வெடிகுண்டு தடுப்பு, செயலிழப்புப் பிரிவு போலீஸாா் வரவழைக்கப்பட்டனா். அவா்கள் ஒவ்வொரு அறையாக சென்று ‘ஹேண்ட் மெட்டல் டிடெக்டா்’ கருவி மூலம் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். மதியம் 2.45 மணியளவில் தொடங்கிய இந்த சோதனை மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த சோதனையில் வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதன்பிறகே மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவல் புரளி என்பது தெரியவந்தது.

எனினும், இந்த வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் எங்கிருந்து யாா் அனுப்பியது என்பது குறித்து சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com