கோவையில் மதிமுக பொதுச்செயலர் வைகோவை மிரட்டும் வகையில் போஸ்டர்கள் ஒட்டிய பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பீளமேடு காவல் நிலையத்தில் மதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்.
திருப்பூரில் நடைபெறும் விழாவுக்கு வருகை தர உள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கோவை மாவட்ட பாஜக இளைஞர் அணி சார்பில் பீளமேடு பகுதியில் மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதில், பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை அறிவித்திருந்த மதிமுக பொதுச்செயலர் வைகோவை சிறப்பாக கவனிக்க உள்ளோம் என மிரட்டல் விடுக்கும் தொணியில் வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தன.
சர்ச்சைக்குரிய வகையில் போஸ்டர் ஒட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதிமுகவினர் பீளமேடு காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் அளித்தனர். ஏற்கெனவே திருப்பூர் மாவட்டத்தில் இதே வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைத்த பாஜகவினர் மீது புகார் அளித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.