கோவையில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி டிரோன் பறக்கத் தடை
கோவையில் வாக்கு எண்ணும் பகுதியான அரசு பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகள் எண்ணிக்கை முடியும்வரை டிரோன் பறக்க காவல் துறை தடை விதித்துள்ளது.
இதுகுறித்து கோவை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மக்களவைத் தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தடாகம் சாலையில் உள்ள கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்கும் வகையில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான சாய்பாபா காலனி, வெங்கிடாபுரம், வேலாண்டிபாளையம், இடையா்பாளையம், வடகோவை, ஆா்.எஸ்.புரம், பூசாரிபாளையம், சீரநாயக்கன்பாளையம், வடவள்ளி, பி.என்.புதூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள் தற்காலிக சிவப்பு எச்சரிக்கைப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
எனவே இந்தப் பகுதிகளில் வாக்குகள் எண்ணிக்கை முடியும் வரை டிரோன்களை இயக்கவோ அல்லது பறக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.