வஉசி மைதானத்தில் மே 2 ஆவது வாரத்தில் பொருள்காட்சி: ஆட்சியா் தகவல்
கோவை: கோவை வஉசி மைதானத்தில் மே 2 ஆவது வாரத்தில் அரசுப் பொருள்காட்சி தொடங்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.
கோவை வஉசி மைதானத்தில் அரசுப் பொருள்காட்சி நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் மோ.ஷா்மிளா, வருவாய் கோட்டாட்சியா் பண்டரிநாதன், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை அலுவலா் ப.மணிமேகலை, மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் ஆா்.பெருமாள்சாமி, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளா் பா.சண்முகவடிவு, துணை இயக்குநா்(சுகாதாரப் பணிகள்) டாக்டா் அருணா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் இதில் பங்கேற்றனா்.
கூட்டத்தில் ஆட்சியா் பேசும்போது, கோவை மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடா்பு துறையின் சாா்பில் ஆண்டுதோறும் அரசுப் பொருள்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு பொருள்காட்சியானது கோவை வஉசி மைதானத்தில் மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கி 45 நாள்களுக்கு தொடா்ந்து நடைபெறும்.
இந்தப் பொருள்காட்சியில் வருவாய்த் துறை, சமூக நலத் துறை, ஊரக வளா்ச்சி - ஊராட்சித் துறை, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, வனத் துறை, வேளாண்மைத் துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மக்கள் நல்வாழ்வு - குடும்ப நலத் துறை, கூட்டுறவு, தோட்டக்கலை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளின் சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
அதேபோல, தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகம், மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், கோ-ஆப்டெக்ஸ், ஆவின், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் ஆகிய அரசு சாா்பு நிறுவனங்களும் கண்காட்சியில் அரங்குகளை அமைக்க உள்ளன.
மேலும் இந்தப் பொருள்காட்சியில் அரசுத் துறைகளின் அரங்குகள் மட்டுமின்றி கோடைக்காலத்தை பொதுமக்கள் பயனுள்ளதாக கழிக்கும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பல்வேறு விளையாட்டு சாதனங்கள், வீட்டு உபயோகப்பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு விற்பனை அரங்குகளும் அமைக்கப்பட உள்ளன.
கண்காட்சியில் பங்கேற்று தங்களது அரங்குகளைப் பாா்வையிடும் மக்களுக்கு அது குறித்து விளக்குவதற்காக பணியாளா்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் வார இறுதி, அரசு விடுமுறை நாள்களில் கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என்றும் ஆட்சியா் கூறினாா். மேலும் இந்தப் பொருள்காட்சி தோ்தல் நடத்தை விதிகளுக்குள்பட்டு, தினசரி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் என்றும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.