டெங்கு காய்ச்சல் பாதிப்பு: கோவை அரசு மருத்துவமனையில் 72 பேர் சிகிச்சை
டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக 72 பேரும், வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு 172 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பருவநிலை மாற்றம் காரணமாக கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக கடந்த இரண்டு மாதத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 16 பேரும், மர்மக் காய்ச்சலுக்கு 2 பேரும், பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனையில் அதிகமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்புக்கு என ஒதுக்கப்பட்டு இருந்த படுக்கை எண்ணிக்கை தற்போது 170 -ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது, டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு கோவையைச் சேர்ந்த 47 பேரும், திருப்பூரைச் சேர்ந்த 20 பேரும், ஈரோடு, நீலகிரியைச் சேர்ந்த 2 பேரும், சேலத்தைச் சேர்ந்த ஒருவரும் என மொத்தம் 72 பேரும், சாதாரண காய்ச்சல் பாதிப்புக்கு 172 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல, தனியார் மருத்துவமனையிலும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.