மக்களின் நலனைக் காக்க கழிப்பறையின் அவசியத்தை அனைவரும் உணர வேண்டும் என ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம், தேவராயபுரம் ஒன்றியப் பள்ளியில் தூய்மை பாரதம் குறித்து சுகாதார விழிப்புணர்வுப் பேரணியைத் தொடக்கிவைத்து அவர் பேசியதாவது:
ஒவ்வொரு கிராமத்தையும் தூய்மை கிரமமாக மாற்ற ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும். திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் நோய்கள், வருமான இழப்பு, மருத்துவச் செலவு, குழந்தைகளின் வளர்ச்சி பாதிப்பு ஆகியவை குறித்து அனைத்துத் தரப்பினரிடமும் தெரிவிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், வீட்டுக்குவீடு கழிப்பறை கட்டுதல் மற்றும் கழிப்பறை பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெண்களின் கெளவுரவத்தைக் காக்கவும், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களின் நலன் காக்கவும் கழிப்பறை அவசியம் என்பதை அனைவரும் உணரவேண்டும்.
நம் கிராமத்தைத் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற கிராமாமக மாற்றுதல் நம் ஒவ்வொருவரின் முயற்சியில்தான் உள்ளது என்றார்.
முன்னதாக, பள்ளி மாணவ, மாணவிகளின் முழு சுகாதார தமிழகம்- முன்னோடி தமிழகம் எனும் உறுதிமொழியை ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தலைமையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்புக் கஷாயத்தை ஆட்சியர் த.ந.ஹரிஹரன் வழங்கினார்.
இந்த விழிப்புணர்வுப் பேரணியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (திட்ட இயக்குநர்) ருபன்சங்கர்ராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சி) பத்மாவதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.