கோவையை அடுத்த ஆலாந்துறையில் உள்ள நீர்நிலைப் பகுதியில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க முயற்சிக்கும் தமிழக அரசுக்கு எதிராக பொது நல வழக்குத் தொடர்வதாக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் கோவையில் உள்ள தனியார் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் வழுக்குப்பாறை பாலு தலைமை வகித்தார்.
இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
கோவை மாவட்டம், பேரூர் வட்டம், ஆலாந்துறை கிராமத்தில் நீர்நிலை ஆதாரப் பகுதியான உப்புப் பள்ளத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது. இதை எதிர்த்துப் பொது நல வழக்குத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு முழு ஆதரவு அளிப்பது. சொட்டு நீர்ப்பாசனக் கருவிகள் மற்றும் விவசாயக் கருவிகளுக்கு ஜிஎஸ்டி வரி விதித்த மத்திய அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை கோவை வடக்கு மாவட்டத்தில் செயல்படுத்தும் வகையில் திட்டமிட தமிழக அரசை வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.கந்தசாமி, செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் ஏ.சண்முகம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.