சூலூர் அருகே உள்ள இருகூர் பேரூராட்சி தமிழகத்திலேயே சிறந்த இரண்டாவது பேரூராட்சியாக தேர்வு செய்யப்பட்டு தமிழக அரசின் சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேரூராட்சியின் செயல் அலுவலர் மு.கனகராஜ் கூறியதாவது:
இருகூர் பேரூராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றன. பேரூராட்சி பகுதிகளில் சேகரமாகும் மக்கும் குப்பைகளைக் கொண்டு உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த உரம் விவசாயிகளுக்கும், வீட்டுத்தோட்டம் அமைத்துள்ளவர்களுக்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இதன் மூலம் சென்ற ஆண்டு
ரூ. 7.43 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. பேரூராட்சி பகுதி முழுவதும் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நபார்டு வங்கி மற்றும் அரசின் நிதி உதவியிடன் பல பகுதிகளில் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மட்டும் மொத்தம் ரூ. 709 லட்சம் மதிப்பீட்டில் பேரூராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று உள்ளன. நூறு சதவீதம் வரிவசூல் செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற பணிகளினால் சிறந்த பேரூராட்சியாக இருகூர் பேரூராட்சி தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற சுதந்திரத் தின விழாவில் இதற்கான பாராட்டுப் பத்திரமும், ரூ. 5 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது என்றார்.