மலைப் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக ரத்து செய்யப்பட்ட உதகை மலை ரயில், சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து 4 நாள்களுக்குப் பின் புதன்கிழமை இயக்கப்பட்டது.
வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, மேட்டுப்பாளையம், கல்லாறு, பர்லியாறு, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் பலத்த மழை பெய்தது.
இந்த தொடர் மழை காரணமாக கல்லாறு முதல் ஹடர்லி, ஹில்குரோவ் பகுதி மலைரயில் பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும், மரங்கள், பாறைகள் ரயில் பாதையில் விழுந்தன.
இந்நிலையில், மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு சென்ற மலை ரயில் திரும்பி வரும்போது பாதையில் ஏற்பட்ட தடையால் குன்னூர் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, பாறை, மரங்களை அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் மலை ரயில் சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், மலை ரயில் பாதையில் நடைபெற்று வந்த சீரமைப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்ததையடுத்து 4 நாள்களுக்குப் பின்னர் புதன்கிழமை இயக்கப்பட்டது.
இதையடுத்து மலை ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்திருந்த வெளிநாட்டினர் உள்பட 150-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் காலை 7.10 மணிக்கு மலை ரயில் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு புறப்பட்டு சென்றது.