கோவை ஸ்டேன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பள்ளிக் குழந்தைகள் துரித உணவுக்கும், கணினி செயல்பாடுகளுக்கும் அடிமையாகி, உடல் நலனில் அக்கறை காட்டுவதில்லை என்ற பரவலான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஆரோக்கியமான எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும் நோக்குடனும், மாணவர்களின் உடல் நலனைப் பேணுவதற்காகவும் ஸ்டேன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் கடந்த 4 -ஆம் தேதி மருத்துவ முகாம் தொடங்கப்பட்டது.
8-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில், கோவை மாசாணி மருத்துவக் குழுமம், லோட்டஸ் கண் மருத்துவமனை ஆகியவற்றைச் சேர்ந்த பல்வேறு துறைகளின் மருத்துவ அலுவலர்கள் பங்கேற்று, மாணவர்களுக்கு உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல்வேறு பரிசோதனைகளில் ஈடுபட்டனர்.
நேரத்துடன் உறங்கச் செல்ல வேண்டும், சுகாதாரமான, சத்தான உணவை உட்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும், மாணவர்களின் உடல் எடை, உயரம், கண்கள், பற்கள் போன்றவற்றை மருத்துவக் குழுவினர் பரிசோதித்து, உரிய ஆலோசனைகளை வழங்கினர். முகாமிற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் பெஞ்சமின் செய்திருந்தார். இதில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்றனர்.