கோவை மாவட்டம், மாநகராட்சிப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் சிங்காநல்லூர் சட்டப் பேரவை உறுப்பினர் நா.கார்த்திக் வலியுறுத்தியுள்ளார்.
கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை எம்எல்ஏ நா.கார்த்திக் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவை மாவட்டம், மாநகரப் பகுதிகளில் டெங்கு, மர்மக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது.
சட்டப் பேரவை எதிர்க் கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தேன்.
ஒவ்வொரு வார்டிலும் நூற்றுக்கணக்கானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு படுக்கை வசதி இல்லாமல் ஒரு படுக்கையில் இரண்டு பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, பலர் தரையிலும் படுக்க வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளை மருத்துவமனை நிர்வாகம் அளிக்கவில்லை.காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் இங்கு சிகிச்சைக்காக வந்தபோது, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு இடம் இல்லாததால் அவர் வந்த ஆட்டோவிலேயே இரவு முழுவதும் படுத்துக் கிடந்ததாகத் தெரிகிறது.
எனவே, டெங்கு, மர்மக் காய்ச்சல் பாதிப்பைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்.