சச்சிதானந்த ஜோதிநிகேதன் பன்னாட்டு பள்ளி சார்பில் தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி மினி மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உதகை சாலையிலுள்ள பிளாக்தண்டர் அருகிலிருந்து புறப்பட்ட மாரத்தான் ஓட்டத்துக்கு, பெரியநாயக்கன்பாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சீனிவாசலு தலைமை வகித்தார். பள்ளி துணைச்செயலர் ஞானபண்டிதன், கல்வி ஆலோசகர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்றார். பள்ளி செயலர் கவிஞர் கவிதாசன், மினி மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் பள்ளியின் 4 முதல் 12-ஆம் வகுப்புகளை சேர்ந்த 850 மாணவ, மாணவிகள் பங்கேற்று ஓடினர். 5 கி.மீ தொலைவுக்கு நடைபெற்ற இப்போட்டியில் பள்ளியின் ஆகாஷ் அணி அதிகப் புள்ளிகள் எடுத்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும், அக்னி, திரிசூல் அணி முறையே 2, 3-ம் இடங்களையும் வென்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கும், தண்ணீர் சேமிப்பு குறித்து நடைபெற்ற பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் சீனிவாசலு பரிசுகளை வழங்கினார். பள்ளி துணை முதல்வர் சக்திவேலு நன்றி கூறினார்.