பிசியோதெரபி கல்விக்கென மத்திய, மாநில அளவில் கவுன்சில் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிசியோதெரபி மருத்துவர்கள் கோவையில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை டாடாபாதில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் பங்கேற்ற மருத்துவர்கள் கூறியதாவது:
பிசியோதெரபி கல்வியை நெறிப்படுத்த மத்திய, மாநில அளவில் கவுன்சில் அமைக்கப்படவில்லை. புது தில்லி, மஹாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் பிசியோதெரபி கவுன்சில் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பிசியோதெரபி கல்விக்கென கவுன்சில் அமைக்கப்படும் என 2009-ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால், இதுவரையில் கவுன்சில் அமைக்கப்படவில்லை. கவுன்சில் அமைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு இயக்கத்தின் சார்பில் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் ஒன்று, இரண்டு ஆண்டு போலி பிசியோதெரபி படிப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும். மத்திய அரசின்கீழ் உள்ள மருத்துவமனைகளில் பிசியோதெரபி மருத்துவர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்தில் கோயம்புத்தூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் வி.ராஜா செல்வகுமார், பொதுச் செயலாளர் ஆர்.ராஜேஷ் கண்ணா, பொருளாளர் எஸ்.அம்சவள்ளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.