இலங்கையில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 1 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் விமானம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தது.
இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, இளைஞரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதில், அந்த இளைஞர் தனது பையில் 1 கிலோ எடையுள்ள தங்கத்தை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.
மேலும், நடத்திய விசாரணையில் அவர், கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்த எம்.முகமது அசன் (25) என்பதும், கொழும்புவில் உள்ள தனியார் நிறுவனத்தில்
வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
கோவையைச் சேர்ந்த நகை வியாபாரிக்கு கொடுப்பதற்காக தங்கத்தைக் கடத்தி வந்ததாகத் தெரிவித்தார்.