தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உடலை வாங்கிச் செல்ல மறுத்து உறவினர்கள், அரசு மருத்துவமனையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி, வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (25). இவரது மனைவி சத்யா. இத்தம்பதிக்கு திருமணம் ஆகி நான்கரை ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில், சத்யாவுக்கு குழந்தை இல்லை. குடும்பப் பிரச்னை காரணமாக சத்யா தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு திங்கள்கிழமை கொண்டுவரப்பட்டது. பிரேதப் பரிசோதனைக்கு பிறகு சத்யாவின் உடலை வாங்க மறுத்த அவரது உறவினர்கள், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமணத்தின்போது சத்யாவுக்குக் கொடுத்த நகைகள் மற்றும் திருமணத்துக்காக செலவு செய்த பணத்தை கணவர் வீட்டார் தர வேண்டும் எனக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார், அவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் பின்னர் உறவினர்கள், சத்யாவின் உடலை வாங்கிச் சென்றனர்.