வேளாண் உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஜாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் வழுக்குப்பாறை பாலு தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
பொதுச் செயலர் பி.கந்தசாமி முன்னிலை வகித்தார். மாநிலப் பொருளாளர் ஏ.சண்முகம், செயலர் எம்.செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதில், உர மானியத்தை நிறுத்த வேண்டும் என்று சிக்கிம் மாநில முதல்வர் கூறியிருப்பதற்கு கண்டனம் தெரிவிப்பது, வங்கிக் கடன் வாங்கிய திருவண்ணாமலை விவசாயி, கடன் வசூலிக்க வந்த வங்கி ஊழியர்களால் படுகொலை செய்யப்பட்டது போன்றவற்றுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சொட்டு நீர்ப் பாசன உபகரணங்கள், வேளாண் உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தமிழகத்தில் மானிய விலையில் வழங்கப்படும் உரங்கள், அண்டை மாநிலங்களுக்கு வேறு பயன்பாட்டுக்கு கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும்.
நாடு முழுவதும் தரமற்ற போலியான இடுபொருள்கள் விற்பனையைத் தடுக்க மத்திய அரசு கடுமையான சட்டம் இயற்ற வேண்டும். எரிவாயுக் குழாய், மின் கம்பங்களை வயல்களில் பதிப்பதைத் தவிர்த்து, வெளிநாடுகளில் உள்ளதைப் போன்று சிறப்பு வழிகள் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.